

கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலோர கிராமங்களான அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதி களில் நேற்று முன்தினம் திடீரென கடல் நீர், மழை நீருடன் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அதாவது கடல் நீரானது பொழிமுகம் வழியாக உள்ளே புகுந்துள்ளது. ஏற்கனவே பொழிமுகம் பகுதியில் கால்வாயில் மண் தூர்ந்து தண்ணீர் சீக்கிரமாக கடலில் கலப்பது தடைபட்டு வந்தது.
இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் கால்வாய் வழியாக ஊருக்குள் புகுந்தது. இதனால் மாதாநகர், வின்சன் நகர் பகுதிகளில் வெள்ளம்போல் கடல் நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மீனவர்கள் பெரும் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சுமார் 100 வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் அங்கிருந்த அத்தியாவசிய பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை சேதமடைந்தன.