மத்தூர் அருகே சோகம்மகன் காதல் திருமணம் செய்ததால் கணவன், மனைவி தற்கொலை

மத்தூர் அருகே சோகம்மகன் காதல் திருமணம் செய்ததால் கணவன், மனைவி தற்கொலை
Published on

மத்தூர்:

மத்தூர் அருகே மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் வேதனை அடைந்த கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதல் திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெருகோனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவருடைய மனைவி கீதா (45). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் ரஞ்சித்குமார் (27). வியாபாரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான தீபிகா (23) என்பவரும் காதலித்து வந்தனர். தீபிகா ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இதனால் அவர்கள் காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதனை பொருட்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து பேசி பழகி வந்தனர். இதனை தொடர்ந்து திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதையறிந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் சரவணன், கீதா மனவேதனை அடைந்தனர். தங்களது பேச்சை கேட்காமல் மகன் காதல் திருமணம் செய்து கொண்டதை நினைத்து வருந்திய அவர்கள் விபரீத முடிவை எடுத்தனர். அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் வீட்டில் சரவணன், கீதா ஆகியோர் விஷம் குடித்தனர். இதனால் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கணவன், மனைவி 2 பேரையும் மீட்டு மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் காதல் திருமணம் செய்து கொண்டதை ஏற்று கொள்ள முடியாமல் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com