கோடை விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கோடை விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

சேலம்,

இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனிடையே கோடை விடுமுறையையொட்டி நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும், மதியத்திற்கு மேல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான குகைகோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன் போன்ற பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று உற்சாகமாக பொழுதை கழித் தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏற்காட் டில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி காணப்பட்டன.

மேலும் படகு இல்லத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்தனர். மதிய நேரத்தில் ஒண்டிக் கடை ரவுண்டானா பகுதியில் உள்ள உணவகங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.

மேலும் படகு இல்லத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மாலை நேரத்தில் சாலையோர கடைகளில் மிளகாய் பஜ்ஜி, ஸ்வீட் கான் போன்ற தின்பண்டங்களின் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com