மக்னா யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு

கூடலூர் அருகே கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் மக்னா யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மக்னா யானையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
மக்னா யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு
Published on

கூடலூர்

கூடலூர் அருகே கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் மக்னா யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மக்னா யானையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மக்னா யானை அட்டகாசம்

கூடலூர்-முதுமலை எல்லையோரம் தொரப்பள்ளி, புத்தூர் வயல், ஸ்ரீ மதுரை உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளது. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் இருந்து மக்னா யானை ஒன்று, கூடலூர் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. சில சமயங்களில் கூடலூர் நகருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

2 கும்கிகள் வரவழைப்பு

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கணேசன், சீனிவாசன் என 2 கும்கி யானைகள் கூடலூர் தொரப்பள்ளிக்கு நேற்று அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து மாக்கமூலா பகுதியில் மக்னா யானை நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தொடர்ந்து காட்டு யானை ஊருக்குள் வந்தால் கும்கி யானைகள் மூலம் விரட்டியடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, அந்த மக்னா யானை ஒவ்வொரு பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்கிறது. இதனால் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டு கும்கி யானைகள் மூலம் விரட்டப்படும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com