

சென்னை,
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கட்சி தலைவர்களிடம் அவருக்கு ஆதரவு தர கோரி வருகிறார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி முடிவு செய்வதற்காக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எம்.எல்.ஏ.க்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, ஆலோசனை கூட்டத்தில் பாரதீய ஜனதாவால் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராம்நாத்திற்கு ஆதரவு கோரினார். அதனால் அ.தி.மு.க. அம்மா அணி முழு மனதுடன் தனது ஆதரவினை ராம்நாத்திற்கு வழங்குகிறது என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.