மீட்புக்குழுவின் கோரிக்கையை ஏற்று துணிப்பை தைத்து கொடுத்த சுர்ஜித்தின் தாய்; மகனை மீட்க உருக்கம்

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் 18 மணி நேரத்தை தாண்டியும் மீட்கப்படாமல் உள்ளான். பல்வேறு கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த போதிலும் விடாமல் 6 குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.
மீட்புக்குழுவின் கோரிக்கையை ஏற்று துணிப்பை தைத்து கொடுத்த சுர்ஜித்தின் தாய்; மகனை மீட்க உருக்கம்
Published on

திருச்சி,

குழந்தை சுர்ஜித் குழிக்குள் விழுந்த 18 மணி நேரமாய் அவனது தாய் கலாமேரி, தவியாய் தவித்து வருகிறார். எப்படியாவது தனது மகனை மீட்டு தன்னிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்ற தளராத நம்பிக்கையில் அவர் உள்ளார்.

இதற்கிடையே நேற்று மீட்புக்குழுவினர் துணிப்பை ஒன்று இருந்தால் நல்லது. அந்த பைக்குள் சிறுவனை அமர வைத்து மீட்டு விடலாம் என்று கூறியுள்ளனர். உடனடியாக தனது வீட்டில் உள்ள தையல் எந்திரம் முன்பு அமர்ந்த கலாமேரி தைக்காமல் இருந்து துணியை எடுத்து ஒரு பையை தைத்துக்கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், எனது மகனை மீட்க நானே தைத்து தருகிறேன் என்று கூறி உடனே தைத்து கொடுத்தேன் என்றார்.

குழந்தையை மீட்க முடியாத நிலையிலும் தனது மகனுக்காக கலாமேரி அந்த பையை தைத்து கொடுத்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

ஆழ்துளை கிணற்றுக்குள் உடல் அசைவின்றி 18 மணி நேரத்திற்கும் மேலாக தவித்து வரும் குழந்தை சுர்ஜித்தை மீட்க கடுமையான போராட்டத்தில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று மீட்பு பணி தொடங்கியது முதல் மழையின்றி காப்பாற்றியது.

ஆனால் இன்று காலை 11 மணிக்கு மேல் மீட்பு பணிகள் நடைபெறும் பகுதியில் லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இதையடுத்து உடனடியாக ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. எந்தவிதத்திலும் மழைநீர் கசிந்து ஆழ் துளை கிணற்றுக்குள் சென்று விடாதவாறு மீட்பு குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com