

சென்னை,
ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று மாலை பணி ஓய்வு பெற உள்ளதால் சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து கேரள ஐகோர்ட்டு நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள ஐகோர்ட்டு நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் அளித்த பரிந்துரையின்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்தவர் தர்மாதிகாரி.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தர்மாதிகாரி மராட்டிய மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். 1992 முதல் வழக்கறிஞராக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார். 2000-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2016-ல் மத்தியபிரதேச ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாகவும் 2018-ல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள ஐகோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.