இருசக்கர வாகனங்களை திருடிய மர்மநபர் - கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடுதல்

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனங்களை திருடிய மர்மநபரை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்களை திருடிய மர்மநபர் - கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடுதல்
Published on

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், செந்தூர்புரம் விரிவு 1-வது பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடுபோய் வருகிறது.

மேலும் சில வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் டிப்-டாப் உடை, முதுகில் பை அணிந்தபடி வரும் வாலிபர், வீடுகளை நோட்டமிட்டு, அங்கு நிறுத்தி இருக்கும் இருசக்கர வாகனங்களை லாவகமாக திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும் அந்த பகுதியில் சுற்றும் வாலிபர்கள், இருசக்கர வாகனங்களை திருட முயற்சிப்பதும், முடியாத சூழல் ஏற்படும் வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி செல்வதும் தெரியவந்தது. இதுபற்றி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளுடன் பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com