

தர்மபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டி அருகே உள்ள சக்கிலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன்கள் வெங்கடேசன் மற்றும் குமார்.
வெங்கடேசன் செய்வினை செய்து தனது இரண்டு கன்றுக்குட்டிகளை கொன்றுவிட்டதாகக் கூறி குமார் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு காட்டு பகுதிக்குள் சென்று தலைமறைவாகி விட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த குமாரை தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் மூன்று நாட்களாக தேடிவந்தனர்.இந்நிலையில் பிக்கிலி வனப்பகுதியில் ஒரு மரத்தில் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூடநம்பிக்கை காரணமாக ஆத்திரத்தில் அறிவிழந்த குமாரின் வெறிச் செயலால் அண்ணன் தம்பி இருவரது குடும்பமுமே அழிந்து விட்டதாக அப்பகுதி மக்கள் பரிதாபம் தெரிவித்தனர்.