நடத்தையில் சந்தேகம்: நடுரோட்டில் மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டர் - பொள்ளாச்சியில் பரபரப்பு


நடத்தையில் சந்தேகம்: நடுரோட்டில் மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டர் - பொள்ளாச்சியில் பரபரப்பு
x

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி(வயது 27). பெயிண்டர். இவருடைய மனைவி சுவேதா(26). தனியார் கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கிரேஷ்(9), கேப்ரியல்(7) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சுவேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏ.பி.டி. ரோட்டில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்த சுவேதா, நேற்று காலையில் அருகில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று விட்டார்.

பின்னர் வீடு திரும்பிய அவர், தான் வேலை பார்க்கும் கடைக்கு புறப்பட்டார். பழனியப்பன் வீதியில் நடந்து சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாரதி, அவரை வழிமறித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக தெரிகிறது. அதற்கு சுவேதா மறுக்கவே, 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சுவேதா புறப்பட்டு சென்றார். ஆனாலும் விடாமல் பின்தொடர்ந்து சென்ற பாரதி நடுரோட்டில் அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த பாரதி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவை குத்த முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுவேதா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் தடுக்க முயன்றபோது ‘அருகில் வந்தால் குத்தி கொலை செய்து விடுவேன்’ என கத்தியை காட்டி பாரதி மிரட்டினார். இதனால் பயத்தில் யாரும் அருகில் செல்லவில்லை. எனினும் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையததிற்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஆத்திரத்தில் இருந்த பாரதி, திடீரென சுவேதாவின் வயிறு உள்பட பல இடங்களில் கத்தியால் குத்தினார். வலி தாங்க முடியாமல் அலறித்துடித்த சுவேதா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். எனினும் ஆத்திரம் அடங்காத பாரதி உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அருகில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தள்ளி கழுத்தில் கால் மற்றும் கை வைத்து நெரித்தார். இதனால் சிறிது நேரத்தில் சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடலை எடுத்து சாலையில் போட்டு விட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். மேலும் அருகில் அமர்ந்தார். உடனே அவரை பொதுமக்கள் பிடித்து, அங்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடத்தையில் சந்தேகம் அடைந்து சுவேதாவை கொலை செய்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து சுவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து பாரதியை கைது செய்தனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story