ஊழல் குற்றச்சாட்டுகளில் வேகமான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

"பழனிக்கு மொட்டை போட்டவர் யார் என்பது காலப்போக்கில் தெரியும்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன்
Published on

கோவை

ஊழல் குற்றச்சாட்டுகளில் வேகமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காரணம் இன்றி டெண்டர்கள் ரத்து செய்யப்படாது என கோவையில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ரேஸ் கோர்ஸ்

கோவை செம்மொழி பூங்கா அமைப்பில் ரூ.40 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டபோது, புதிய அரசு தற்போது தான் பொறுப்பேற்றுள்ளதாகவும், இதுபோன்ற விவகாரங்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றவை என்றும் தெரிவித்தார். தவறுகள் குறித்து அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும், ரேஸ் கோர்ஸ் தொடர்பான சில டெண்டர்களும் கூடுதல் மதிப்பீடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அரசு உறுதி

மேலும், "முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் எந்த தவறும் நடக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி டெண்டர்களின் காலக்கெடு அடுத்த ஆண்டு வரை இருப்பதால் அதுவரை காத்திருக்க வேண்டும். காரணமின்றி எந்த டெண்டரையும் ரத்து செய்ய முடியாது. தேவையான ஆய்வுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் தெளிவான முடிவுகளை எடுப்பார்" என்றார்.

வரவேற்கத்தக்க நடவடிக்கை

ஆம்னி பேருந்துகள் அரசு பேருந்துகளுக்கான கட்டணத்திலேயே சேவையை இயக்குவதாக அறிவித்திருப்பது குறித்து பேசிய அவர், "இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே சேவையை வழங்குவது பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும்" என்றார்.

ரெஸ்ட்ரோ பார்

ரெஸ்ட்ரோ பார் விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, போதைப்பொருள் ஒழிப்பில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து முதல்-அமைச்சர் படிப்படியாக தேவையான முடிவுகளை எடுப்பார் என்றும் கூறினார்.

காலப்போக்கில் தெரியும்

"பழனிக்கே மொட்டை போட்டுவிட்டார்கள்" என்ற எதிர்க்கட்சியினரின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டபோது, "பழனிக்கு மொட்டை போட்டவர் யார் என்பது காலப்போக்கில் தெரியும்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com