திருப்பூரில் 'ஆபரேஷன் சிந்தூர்' வாசகத்துடன் டி-சர்ட்டுகள் தயாரிப்பு

தமிழகம் மட்டுமில்லாமல் வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து புதிய ஆர்டர்கள் வருகிறது என்று பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் 'ஆபரேஷன் சிந்தூர்' வாசகத்துடன் டி-சர்ட்டுகள் தயாரிப்பு
Published on

திருப்பூர்,

இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்களை கவரும் வகையில் டி-சர்ட்டுகளை தயாரிப்பதில் திருப்பூர் முன்னிலை பெற்று விளங்கி வருகிறது. குறிப்பாக திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகள், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் கொண்ட வாசகங்களுடன் டி-சர்ட்டுகள் அச்சிட்டு தயாரித்து சந்தைப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும்போது அதுதொடர்பான டி-சர்ட்டுகள் திருப்பூரில் தயாராகி அனுப்பி வைக்கப்பட்டது. அதுபோல் இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் டி-சர்ட்டு, திருக்குறள் டி-சர்ட்டுகள் என விதவிதமாக அச்சிட்டு டி-சர்ட்டுகள் அந்தந்த காலங்களில் ஆர்டர்களின் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தனர். ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் வாசகங்களுடன் டி-சர்ட்டுகள் வாங்க தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநில இளைஞர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்கான ஆர்டர்கள் தற்போது திருப்பூர் நோக்கி வரத்தொடங்கியுள்ளன. சர்வதேச அளவிலும் இதுபோன்ற ஆடைகள் தயாரிப்பு ஆர்டர்கள் வந்துள்ளன.

இதுகுறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கூறும்போது, 'ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை பாராட்டியும், அதை வரவேற்றும் வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகள் தயாரிக்க ஆர்டர்கள் வருகிறது. இளைஞர்களிடம் வரவேற்பு அதிகம் உள்ளதால் பல்வேறு வண்ணங்களில் விதவிதமான டிசைன்களில் தயாரித்து வருகிறோம். தமிழகம் மட்டுமில்லாமல் வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து புதிய ஆர்டர்கள் வருகிறது. காலத்துக்கேற்ப பனியன் தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com