கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி பேச்சுவார்த்தை: கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி பேச்சுவார்த்தை: கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொரு மாதமும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து வருகிறார்.

அந்த வகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நேற்று மாலை 5 மணி முதல் 5.20 மணி வரை நீடித்தது.

இந்த சந்திப்பின்போது அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், முதல்-அமைச்சரின் செயலாளர் செந்தில்குமார், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்புகள், நோய் தடுப்பு தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்பட பல தகவல்கள் அடங்கிய முழு விவர அறிக்கையை கவர்னரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com