பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு
தாம்பரம் , சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன
சென்னை,
சென்னையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை கடற்கரை -செங்கல்பட்டு, வழித்தடங்களில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி 8.50 மணிக்கு மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் 6-வது பெட்டியில் புகை வந்ததால் பல்லாவரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதன்பின்னர் கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயிலும் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த வழித்தடத்தில் சென்ற ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பின்னர் நீண்ட தாமதத்திற்குப்பின் ரெயில் சேவை தொடங்கியது. ரெயில்கள் தாமதமாக வந்ததால் அலுவலகம் செல்வோர் உள்பட பல்வேறு தரப்பு பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.








