

சென்னை,
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில், ரெயிலில் ஏற முயன்றபோது கால் தவறி தண்டவாள இடுக்கில் விழுந்த பயணியை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பத்திரமாக மீட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில்கள் மூலம் பயணித்து வருகின்றனர். இதனால் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. ரெயில்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.
தாம்பரத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் சில்காட் டவுன் வரை செல்லும் நாகோன் விரைவு ரெயில் மேற்கு வங்க மாநிலம் வழியாக வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த போது ஏராளமான வட மாநிலத்தினர் ரெயிலில் இடம். பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறினர்.
அப்போது வடமாநில தொழிலாளி ஒருவர் கூட்டநெரிசலில் ரெயில் இருந்து தவறி நடைமேடைக்கும். ரெயிலுக்கும் இடையே இருந்த மிக குறுகிய தண்டவாள பகுதியில் விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் அலறினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர், ரெயிலின் அடியில் இருந்த அந்த பயணியின் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டு, அவரை முழு பலத்துடன் பிளாட்பாரத்தின் மேல் நோக்கி இழுத்து தூக்கினார்.
மரணத்தின் விளிம்பிற்கு சென்ற பயணியை காப்பாற்றிய போலீஸ்காரரின் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. போலீசாரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.