தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது வழித்தட பணிகள் விரைவில் முடிவடையும் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தகவல்

ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது வழித்தட பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.
தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது வழித்தட பணிகள் விரைவில் முடிவடையும் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தகவல்
Published on

சென்னை,

பிரதமர் மோடி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்திருந்தார். இதையடுத்து ரெயில்வே வாரிய தலைவர், மண்டல ரெயில்வே பொதுமேலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தெற்கு ரெயில்வே சார்பில் பொதுமேலாளர் ஜான் தாமஸ் கலந்து கொண்டார். காணொலி காட்சி கூட்டத்துக்கு பிறகு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே ஊழியர்கள் 11.56 லட்சம் பேருக்கு மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த போனஸ் மூலம் தெற்கு ரெயில்வேயில் ரூ.130 கோடியில், 72 ஆயிரத்து 241 ரெயில்வே ஊழியர்கள் பயன் பெறுவார்கள். இந்த போனஸ் தொகை வருகிற 15-ந் தேதி ஊழியர்களின் வங்கி கணக்கில் சென்றடையும். கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டில் தெற்கு ரெயில்வே சிறப்பாக செயல்பட்டுள்ளது. இன்னமும் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. எனவே ரெயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டங்களை தவிர்க்கவே நடைமேடை டிக்கெட் விலை ரூ.10-லிருந்து ரூ.50 ஆக உயர்த்தினோம்.

வேகத்தை அதிகரிக்க திட்டம்

தெற்கு ரெயில்வேயில் தற்போது 95 சதவீத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டுவிட்டன. ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் பயணிக்கும் போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு முறையாக கடைபிடிக்காத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு பயணிகளை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வைக்கின்றோம். இதில் பயணிகளின் ஒத்துழைப்பும் மிக அவசியம். தெற்கு ரெயில்வே பணிகளை பொறுத்தவரை சென்னை கடற்கரை-அத்திப்பட்டு 4-வது வழித்தடப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல், தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது வழித்தடம் விரைவில் முடிவடைந்து பாதுகாப்பு ஆய்வு நடைபெற இருக்கின்றன. மதுரை-தேனி வழித்தடம் ஆண்டிப்பட்டி வரை முடிவடைந்துள்ளது. கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை வழித்தடம் 2024-ம் ஆண்டு முடிவடையும். தொடர்ந்து, ரெயில்களின் வேகத்தையும் அதிகரிக்க திட்டமும் எங்களிடம் உள்ளது.

படிப்படியாக இயக்கப்படும்

சென்னை-கூடூர் வழித்தடத்தில் 110 கி.மீ. வேகத்தை 130 கி.மீ வேகமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது. சென்னை-ரேணிகுண்டா செல்லும் ரெயிலின் தற்போதைய வேகம் 105-110 கி.மீ ஆக உள்ளது. இதனை 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 130 கி.மீ. ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்துக்குள் இயங்கும் அனைத்து ரெயில்களுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் இயக்கப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் ஒரு சில ரெயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. விரைவில், சூழ்நிலையை பொறுத்து படிப்படியாக இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com