

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம்-காரைக்கால் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில், வருகிற 20-ந்தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு, வேளாங்கண்ணி வரையில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16175), பேரளத்தில் இருந்து திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் வழியா வேளாங்கண்ணிக்கு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16176), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து பேரளம் வரையில் ஏற்கனவே உள்ள கால நேர அட்டவணை படி இயக்கப்படும். மேலும், சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட இந்த ரெயில் தற்போது எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டுள்ளதால் ரெயில் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.