

சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த ரீகன் என்பவருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள், சிங் அவர்களுக்கு சொந்தமான
1 விசைப்படகு என நான்கு விசைப்படகுகளையும், அதில் உள்ள தமிழக மீனவர்களையும் நேற்று (22.12.2025) இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கச்சத்தீவைத் தாரைவார்த்த தமிழ்நாடு விரோத சுயநல திமுக- காங்கிரஸ் கூட்டணியின் வரலாற்றுத் தவறால் இன்று வரை தமிழகத்தின் மீனவர்கள் சொல்லொண்ணாத் துயர்களுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக உள்ளது. திமுக கூட்டணியின் ஒற்றைத் தவறைத் திருத்தவே இன்று வரை அதிமுக தொடர்ந்து போராடி வருகிறது.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், படகுகள் மற்றும் உடைமைகளை உடனடியாக விடுவிக்க அந்நாட்டு அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.