தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு வரும் அக்.15ம் தேதி நடைபெறும் - ராமதாஸ் வரவேற்பு

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, நடப்பாண்டில் வரும் அக்டோபர் 15-ம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு வரும் அக்.15ம் தேதி நடைபெறும் - ராமதாஸ் வரவேற்பு
Published on

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, நடப்பாண்டில் வரும் அக்டோபர் 15-ஆம் நாள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தத் தேர்வுகள் நடப்பாண்டில் இன்னும் அறிவிக்கப்படாததை சுட்டிக்காட்டி கடந்த ஒன்றாம் நாள் அறிக்கை வெளியிட்ட நான், உடனடியாக நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு என்பது மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கான சிறந்த கருவி ஆகும். இந்தத் தேர்வை வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் விரிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மத்திய, மாநில பாடத் திட்டங்களின் கீழ் 10 லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் 11-ஆம் வகுப்பு பயிலும் நிலையில், அவர்களில் குறைந்தது 5 லட்சம் பேராவது இந்தத் தேர்வை எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் வெகுமதியை மாதம் ரூ.5000 வீதம் 5000 மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

அதேபோல், தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது 50% இட ஒடுக்கீடு வழங்கப்படுகிறது. இதை 80% ஆக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com