

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். அவர் இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து கொல்கத்தா சென்றடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என். ரவியை சிறப்பான முறையில் கவர்னர் மாளிகை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். ஆர்.என். ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து புதிய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 8.30 மணிக்கு கேரளாவில் இருந்து விமானத்தில் சென்னை வருகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இன்று இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நாளை பகல் 12.30 மணிக்கு தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவி ஏற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.