எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் - நாளை நடக்கிறது

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் - நாளை நடக்கிறது
Published on

சென்னை,

இந்த ஆண்டின் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில், 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதேபோல், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, தொழிற்சாலைகள் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட இருக்கிறது. மேலும், தமிழகத்தில் நடத்தப்பட வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com