முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

கோப்புப்படம்
புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், துறை ரீதியாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 17ம் தேதி) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணியளவில் நடக்கும் இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். .
இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்கள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்தும், ஆலோசனை நடைபெறலாம் என்றும், சில துறைகள் சார்ந்த கொள்கை முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.