அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர அழைப்பு

காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.
அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர அழைப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும் எதிர்க்கட்சியான திமுக ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளது. அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் முதல் அமைச்சருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ஆளுநர் முடிவுக்காக காத்திருக்க போவதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

இதற்கிடையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, சபாநாயகர் தனபால், 19 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். அதற்கு, அவர்கள் இடைக்கால விளக்கம் அளித்தனர். இதையடுத்து, முழு விளக்கம் அளிக்க, செப்டம்பர் 14ல் (இன்று) நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், கர்நாடக மாநிலம் குடகுவில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று சென்னை வந்து சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்து அமைச்சர்களுக்கும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர அழைப்பு விடுத்துள்ளார். காலை 10 மணிக்கு அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com