தமிழக பொறியியல் சேர்க்கை: ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

முதல் சுற்று கலந்தாய்வில் 32,250 மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரி மற்றும் பாடங்களை பதிவு செய்திருந்தனர்.
தமிழக பொறியியல் சேர்க்கை
Published on

சென்னை,

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திரிப்பதாவது:-

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2026 கால அட்டவணையில் கொடுக்கப்பட்டிருந்த படி சிறப்பு கலந்தாய்வு, அரசு பள்ளியில் பயின்ற மற்றும் பொது பிரிவினருக்கு 13.07.2026 முதல் 19.07.2026 வரை நடைபெற்றது. இதில் 950 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணாக்கர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.

அதை தொடர்ந்து முதல் சுற்று கலந்தாய்விற்கான விருப்பப்பட்டியல் உள்ளீடு செய்தல் 20.07.2026 முதல் 22.07.2026 வரை நடைபெற்றது. இதில் 32,250 மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரி மற்றும் பாடங்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 28,550 பேருக்கு மாணாக்கர்களின் தரவரிசை, கல்லூரியில் உள்ள இடங்கள் மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கை

மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டானண வெளியிடுவதற்கு முன்பாக 23.07.2026 அன்று ஒதுக்கீட்டானைகளை 11 அரசு பொறியியற் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு தரவரிசை மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று நேரடி சரிபார்ப்பு செய்யப்பட்டது. தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்கள் விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள TFC (Tamil Nadu Facilitation Centre) மையத்திற்கும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரியிலும் நேரடியாகச் சென்று 26.07.2026 முதல் 30.07.2026 வரை அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கை பெறவேண்டும்.

மாணாக்கர்கள் தங்களது விருப்ப பட்டியலில் எத்தனை கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு விருப்பங்கள் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அதனை கையாளும் வகையில் திறன்மிகுந்த மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட மென்பொருள் வடிவமைத்து செயலாக்கப்பட்டுள்ளது.

மாணாக்கர்கள் சேர்க்கை பற்றிய விளக்கங்கள் அளிப்பதற்காக அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் சேர்க்கை மைய அலுவலர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்குநர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகம் விவேகானந்தா அரங்கில் 16.07.2026 அன்று கூட்டம் நடைபெற்றது. அதில் 423 கல்லூரிகளில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இணையதளம் மூலம் மாணாக்கர் சேர்க்கையை உறுதி செய்வது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்குநர் அவர்கள், கல்லூரி முதல்வர்களிடம் அரசு பள்ளியில் பயின்ற மாணாக்கர்களிடம் இருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும், வேறுவிதமாக மாணாக்கர்களின் விவரங்களை கொண்டு தவறான சேர்க்கைகளை செய்ய கூடாதென்றும் வலியுறுத்தினார். மேலும் இந்த நடைமுறையை பின்பற்றாத கல்லூரிகள் மற்றும் நடைமுறையில் வேறு புகார்கள் ஏதேனும் தெரியவந்தால், அதன் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

புகார் தெரிவிக்க...

ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். tndote@tndote.com. கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களையும் மற்றும் ஒதுக்கீட்டானண பற்றிய விளக்கங்கள் பெற வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பு எண்: 1800-425-0110. இது தொடர்பாக, மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com