

நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு அருகே இரட்டை பாலம் பகுதியில் நேற்று ஒரு லாரியும், சரக்கு வேனும் மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் நின்று கொண்டு இருந்தன. இதனால் தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
அப்போது ஆந்திராவில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரி போக்குவரத்து பாதிப்பால் சாலையில் அணிவகுத்து நின்ற 12 கார்கள், ஒரு சரக்கு வேன் ஆகியவை மீது அடுத்தடுத்து மோதியது. மேலும் அங்கு நின்று இருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள பள்ளிப்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 40) என்பவர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்தில் கார்களில் வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (38), ஓமலூர் காமராஜ் நகரை சேர்ந்த மதன்குமார் (42), கோவையை சேர்ந்த நித்யானந்தம் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த கண்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 4 பேர் இறந்த தகவல் அறிந்ததும், தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று கார்களில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தொடர் விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விபத்தில் சிக்கிய லாரிகள், கார், சரக்கு வேன் ஆகியவற்றை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 4 பேர் இறந்த தகவல் அறிந்ததும் கலெக்டர் கார்த்திகா, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் விபத்தை தடுப்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.