உப்பாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
சென்னை,
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி., பாசனத்திட்டம் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் வாயிலாக, இரு மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தாராபுரம் தாலுகாவில் உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இந்தநிலையில், உப்பாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள உப்பாறு அணையிலிருந்து, வலது மற்றும் இடது கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்காகவும், 03.01.2026 முதல் 23.01.2026 முடிய தகுந்த இடைவெளிவிட்டு, 11 நாட்களுக்கு, மொத்தம் 173 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கெத்தல்ரேவ், தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம், சூரியநல்லூர், கண்ணன் கோயில், மடத்துப்பாளையம், வரப்பாளையம், வடுகபாளையம் மற்றும் சின்னப்புத்தூர் ஆகிய கிராமங்களிலுள்ள 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






