

சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவில் தேசிய மருத்துவர் தினம் வருடம்தோறும் ஜுலை 1-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மருத்துவர் தினத்தில் அவர்களின் மகத்தான பணியை போற்றுவோம்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், மேற்கு வங்க முன்னாள் துணை முதல்-மந்திரியும், சமூக சேவகருமான டாக்டர். பி.சி ராய்யின் பிறந்தநாளை அவரது சேவையை போற்றும் விதமாக கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து மருத்துவர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் மனித நேயத்தோடு, அர்பணிப்பு உணர்வோடு, இரவு பகல் பாராது, மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் தன்னலமற்ற பணி போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது.
நமது வாழ்வை காக்கும் பணியில் ஓய்வின்றி உழைக்கும் அவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டார்கள் என்பது வருத்தத்திற்குரியது.
தற்பொழுது உள்ள தமிழக அரசு, மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் அவர்களின் வாழ்வும் ஒளி வீச, தமிழக அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.