பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
Published on

கோவை,

கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பலனடைந்து உள்ளனர். இந்த வரியை குறைத்ததால் மத்திய அரசிற்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரி மூலம் ஆண்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடி வரை தமிழக அரசிற்கு வருவாய் கிடைக்கறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின் விலையை மத்திய அரசு குறைத்து உள்ளது.

மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்து வரிவசூல் செய்கின்றது. மேலும் கிடைத்த வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. தமிழகத்திற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

சென்னையில் பா.ஜனதா பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மிரட்டல் அதிகரித்து உள்ளது. தி.மு.க.வின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com