

பேக்கேஜ் டெண்டர்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2014-15-ம் நிதியாண்டில் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் என்ற புதிய முறையை கொண்டுவந்தனர்.அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே டெண்டராக பெரிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டன.இதன் காரணமாக குறிப்பிட்ட சில ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் பெற்றுவந்தன. சிறிய ஒப்பந்ததாரர்கள் வருவாய் இழப்புக்கு ஆளாகினர்.
ரத்து
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபிறகு பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவித்து உரிய தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேக்கேஜ் டெண்டர்' முறை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
இந்தநிலையில், பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் வரவேற்பு
இதன்மூலம் வருங்காலங்களில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாகவே டெண்டர் விடப்படும்.ஒரு பணிக்கு ஒரு டெண்டர், ஒரு ஒப்பந்ததாரர் என்ற முறை அமலுக்கு வருவதால் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஒப்பந்ததாரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.