பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்குவதில் மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: அண்ணாமலை வரவேற்பு

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்குவதில் மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: அண்ணாமலை வரவேற்பு
Published on

சென்னை,

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, 2020ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ள, காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் (இல்லம் தேடிக் கல்வி) போன்றவற்றை, வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, முழுவதும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பள்ளி மாணவர்கள், பல்துறை அறிவையும், பலமொழிப் புலமையும், தொழிற்கல்வித் திறனையும் ஒருங்கே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும்.

நமது மாணவர்கள் நலனுக்காக, தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளிலும், இதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com