

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை திருமலையாம்பாளையம் அருகேயுள்ள குடோனில், நமது மத்திய அரசு நலத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் வழங்கப்படும் உர மூட்டைகள், டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்படும் உர மூட்டைகள், தமிழகத்தில் பதுக்கி வைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட பின்பு கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்லப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றன.
அதுமட்டுமன்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற சட்டவிரோதமான கடத்தல்களுக்கு, தமிழகத்தை ஓர் “மையப்புள்ளி”யாக உபயோகிக்குமளவிற்கு நமது அரசு இயந்திரம் “corrupt” ஆகிக் கிடப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது. இத்தகைய சட்டவிரோதச் செயலை முந்தைய திமுக அரசும், தற்போதைய தவெக அரசும் கவனிக்கத் தவறிவிட்டன என்பது அவர்களின் நிர்வாகத் தோல்வியைத்தான் குறிக்கிறது.
எனவே, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட குடோனின் உண்மையான உரிமையாளர் யார்? பின்புலங்களை முறையாக ஆராயாமல் இத்தகைய குடோனிற்கு அரசு எப்படி அனுமதி வழங்கியது? இதுவரை எத்தனை டன் உர மூட்டைகள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டு, கைமாற்றப்பட்டன? தமிழகத்திற்கு வழங்கப்படும் உர மூட்டைகளும் இதில் பதுக்கப்பட்டுள்ளனவா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் ஜோசப் விஜய் அரசு பதிலளிக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் தன்னிச்சையாக இயங்கும் தனியார் குடோன்களில் உடனடியாக சோதனைகள் மேற்கொண்டு, இதுபோன்று சட்டவிரோதமான செயல்கள் ஏதேனும் நடக்கின்றனவா என்பதை அரசு கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.