

சென்னை,
1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறிப் பொருட்களை "கோ-ஆப்டெக்ஸ்" என்ற வணிக முத்திரையின் கீழ் நாடு முழுவதும் 146 விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி வரும் முன்னணி நிறுவனமாகும்.
கோ-ஆப்டெக்ஸ் வணிகத்தை விரிவுபடுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும், இளம் தலைமுறையினரை அதிகளவில் ஈர்க்கவும், புதுதில்லி, கன்னாட் பிளேஸ், மாநில எம்போரியா வளாகம் (State Emporia Complex), சி-1, பாபா கரக் சிங் மார்க் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1,600 சதுர அடி பரப்பளவிலான கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு (Pudupavu)" விற்பனை நிலையம் ரூ.49.00 லட்சம் மதிப்பீட்டில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று தமிழ்நாடு அரசின் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா இணைந்து, நவீனமயமாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் "புதுப்பாவு" விற்பனை நிலையத்தை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு வசதிகள் மற்றும் விற்பனை ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
ரூ.49.00 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டுள்ள இவ்விற்பனை நிலையத்தில் நவீன உள்துறை வடிவமைப்பு, உயர்தர ஒளியமைப்பு, மேம்படுத்தப்பட்ட பொருட்காட்சி வசதிகள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற நவீன கொள்முதல் சூழல் மற்றும் மேம்பட்ட விற்பனை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்விற்பனை நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், கோயம்புத்தூர் மென்பட்டுச் சேலைகள், ஆரணி பட்டுச் சேலைகள், சேலம் பட்டுச் சேலைகள், பருத்திச் சேலைகள், ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், வேஷ்டிகள், ஆயத்த சட்டைகள், நவீன இண்டிகோ இணைவு ஆடைத் தொகுப்புகள், நவீன ஆண்கள் குர்தா (அச்சு) தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு உயர்தர கைத்தறிப் பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்பொருட்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெசவுத் திறனையும் கைத்தறி கலை மரபையும் பிரதிபலிக்கின்றன.
கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகளை பொதுமக்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cooptex.com வாயிலாகவும் எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.
2025–2026 ஆம் நிதியாண்டில் புதுதில்லி "புதுப்பாவு" விற்பனை நிலையம் ரூ.127.00 லட்சம் விற்பனையை பதிவு செய்துள்ளது. 2026–2027 ஆம் நிதியாண்டிற்கு ரூ.200.00 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், தீபாவளி 2026 விற்பனைக்காக ரூ.65.00 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீனமயமாக்கப்பட்ட "புதுப்பாவு" கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் வடஇந்தியாவில் கோ-ஆப்டெக்ஸின் வணிக வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதோடு, புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து, தமிழ்நாட்டின் வளமான கைத்தறி பாரம்பரியம், கலைநயம் மற்றும் உயர்தர கைத்தறித் தயாரிப்புகளை நாடு முழுவதும் பரப்புவதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒரு வார கால சிறப்பு தள்ளுபடியாக 20 + 20 சதவீகித கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வின் போது, ஜெயா, கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைமை உள்ளுறை ஆணையர், தமிழ்நாடு இல்லம், புதுடெல்லி. டி. என். வெங்கடேஷ், முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, தமிழ்நாடு அரசு. உமா மகேஸ்வரி, கைத்தறி இயக்குநர், தமிழ்நாடு அரசு. இன்னசென்ட் திவ்யா, மேலாண்மை இயக்குநர், கோ-ஆப்டெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.