

சென்னை,
சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் 'ஹாட்ஸ்பாட்' பட்டியலில் தமிழகம் 7-வது இடத்திலும், சைபர் மோசடிகளால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் 4-வது இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் முக்கிய திட்டங்களை விரைவுபடுத்தவும், முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பிரதமர் தலைமையில் மாதந்தோறும் 'பிரகதி' என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கடந்த 2 மாதங்களாக சைபர் குற்றங்கள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் நடந்த 52-வது பிரகதி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரிவுகளில் சைபர் குற்றமும் இடம்பெற்றது. சைபர் குற்றங்களை தடுக்கவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து, தேசிய அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ஹாட்ஸ்பாட் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இம்மாதம் நடக்கவுள்ள பிரகதி கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அதில் கூறப்பட்ட தகவலின்படி சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் மேற்குவங்கம் முதல் இடத்திலும், உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும், மராட்டியம் 3-வது இடத்திலும் உள்ளன. இதில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. அதேபோல் சைபர் குற்றங்களால் அதிகளவில் பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்திலும், கர்நாடகா 2-வது இடத்திலும், உத்தரபிரதேசம் 3-வது இடத்திலும் உள்ளன. இதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 88,385 சைபர் குற்ற புகார்கள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில் "கடந்த 2 மாதங்களாக பிரகதி கூட்டத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் சைபர் குற்றங்களால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்திலும், தமிழக அளவில் கோவை முதல் இடத்திலும் உள்ளன. 53-வது கூட்டத்தில் சைபர் குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.