

சென்னை,
மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்படுகிறது.
புதிய தமிழகம் கட்சியின் முன்னெடுப்பில், மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்திடவும், ஆண்டுதோறும் காவிரி நதிநீர் பங்கீட்டை தடையின்றி பெற்றிடவும், அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் இன்று காலை 11 மணிக்குச் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு மெட்ரோபாலிட்டன் அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
தீர்மானம் : 1
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் "கர்நாடக அரசின் பிடிவாதப் போக்குிற்கு" தமிழக அரசியல் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 40 டி.எம்.சி அளவு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையும்; தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, தினமும் பொதுமக்கள் சாலைக்கு வந்து போராடும் அவல நிலையும் உருவாகியுள்ளது.
3.5 டி.எம்.சி நீரை 15 தினங்களுக்கு திறந்துவிட இரண்டு தினங்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையம் பரிந்துரைத்தும், "ஒரு சொட்டு நீரைக் கூட திறந்துவிட முடியாது; இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம்" என கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் அறிவித்துள்ள நிலையை அறிந்தும், உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு பதிலாக, கர்நாடக முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை, பிரதமருக்கு கடிதம் என இன்றைய தமிழக அரசு நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக்கூட்டிட தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதை உதாசீனப்படுத்திவிட்டு மெத்தனப்போக்குடன் செயல்படும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை அனைத்துக் கட்சிக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக முதல்-அமைச்சர் ஆர்வம் காட்டியும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் "இன்னொரு சந்திப்பில் சந்திக்கலாம்" எனக் கூறியுள்ளது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவாகவே இக்கூட்டம் கருதுகிறது.
ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் உச்சநீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி பெற்ற காவிரி உரிமையை தமிழகத்தில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும் விட்டுத்தரக்கூடாது. "மேல்மடையில் உட்கார்ந்திருக்கிறோம்" என்ற தைரியத்தில் "ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிட முடியாது" என கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது; பந்த் நடத்தப்படுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில்கூட இன்றைய தவெக அரசு விழித்து கொள்ளவில்லையெனில், எட்டு கோடி தமிழக மக்களின் காவிரி நதிநீர் உரிமை பறிபோய்விடும் அவலநிலை ஏற்படும். எனவே, இனி சிறிதும் காலம் தாழ்த்தாமல் செயல்படுமாறு இவ்வாரசை வலியுறுத்துவதுடன்; இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று, பாரத பிரதமரை சந்தித்து, மேகதாது அணை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காவிரி நதிநீர் பங்கீடு அனைத்து காலகட்டங்களிலும் எந்தவித இடர்ப்பாடும் இன்றி முறையாக கிடைத்திடவும் உரிய அழுத்தம் கொடுக்க முதல்வர் விஜய் அவர்களை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீரவை கண்டிட அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்படுகிறது.