தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது - அமைச்சர் நாசர் திட்டவட்டம்

வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
சென்னை,
புதிய வக்பு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”1995 ஆம் ஆண்டு வக்புசட்டத்தினை மத்திய அரசு திருத்தம் செய்து, ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம்,1995-னை 08.04.2025 அன்று நடைமுறைப்படுத்தியது.
இச்சட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடுத்தது. இதே போல் பல்வேறு தரப்பினரும் இச்சட்டத்தினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இவ்வாறு தொடுக்கப்பட்ட இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 15.09.2025 அன்று இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது.
தற்போது, மேற்கண்ட வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மத்திய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய வக்பு திருத்தச் சட்டத்தின் படி, வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






