டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோப்புப்படம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
எஸ்.ஐ.ஆர். நடைமுறையை திறம்பட எதிர்கொண்டு செயலாற்றி கொண்டிருக்கும் கழகத்தின் போர்ப்படை தளபதிகளான எல்லாருக்கும் பாராட்டுகள். தமிழ்நாட்டின் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்தவர்கள் என்று மட்டும் சுமார் 66 லட்சம் பேரை நீக்கியிருக்கிறார்கள்.
எஸ்.ஐ.ஆர். பணிகளை அவசரகதியில் ஆரம்பித்தபோதே இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்; தகுதியான தமிழ்நாட்டு வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என முன்கூட்டியே எச்சரித்தோம். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடுத்திருக்கிறோம்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, தொகுதிப் பார்வையாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் என ஒவ்வொரு உடன்பிறப்பும், பம்பரமாக உழைத்தீர்கள். அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் களத்துக்கே வரவில்லை. துரும்பை கூட கிள்ளி போடவில்லை. அதனால்தான், நாம் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. எனவே, நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும். 168 தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இதை நாம் வாக்குச்சாவடி வாரியாக பார்க்க வேண்டும். ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட படிவம் - 6 நிரப்பிக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் யாரெல்லாம் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர்கள் என்ற விவரம் நாளைக்குள் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விவரங்களை முழுமையாக சரிபார்த்து விடுபடல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். போலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுக்க இருந்த வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கை, 68,467-ல் இருந்து,75,032 ஆக உயர்ந்திருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகள் அனைத்துக்கும் புதிய BLA-2 மற்றும் BLC பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். நம்மை நேர்வழியில் வீழ்த்த முடியாத பாசிச சக்திகளும், எதிரிகளும் குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். அதற்கு நாம் கடுகளவுகூட இடம் தரக்கூடாது.
நம் கவனத்தை திசைதிருப்பவும், நம்முடைய உழைப்பை வீணாக்கவும் எதிரிகள் கூட்டமும், வீணர்கள் கூட்டமும் முயற்சி செய்வார்கள். அதையெல்லாம் புறந்தள்ளி, தேர்தல் பணி ஆற்றுங்கள். வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில், பதற்றமோ, அசதியோ கூடாது. இனிமேதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓட வேண்டும்.
களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரைக்கும் கவனம் சிதறாமல் உழையுங்கள். டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடே வெல்லும்! இவ்வாறு அவர் கூறினார்.






