தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பைவிட மழை அதிகம் இருக்கும் - வானிலை ஆய்வாளர்கள் தகவல்

அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பைவிட மழை அதிகம் இருக்கும் - வானிலை ஆய்வாளர்கள் தகவல்
Published on

சென்னை,

தென் மேற்கு பருவமழை, வெப்பசலன மழையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி, 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 6 சதவீதம் குறைவு ஆகும்.

இந்த மாதம் தமிழ்நாட்டில் பெரும்பாலான நாட்களின் வெப்பமான சூழ்நிலையே அதிகம் நிலவியதால், மழைப் பதிவு குறைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.

அந்த வகையில் அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும் என்றும், 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதேபோல், 18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் எனவும், ஒட்டுமொத்தத்தில் அடுத்த மாதம் இயல்பைவிட அதிக மழையும், இயல்பான வெப்பமும் தமிழ்நாட்டில் பதிவாகும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com