

சென்னை,
தாய்லாந்து நாட்டில் அதிக சம்பளத்தில் கணினி வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழக இளைஞர்கள், மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள சர்வதேச சைபர் குற்ற கும்பல்களிடம் சிக்கி தவித்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களை மீட்கக் கோரி அனுப்பிய ரகசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் வழியாக "தாய்லாந்தில் டேட்டா என்ட்ரி மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு ஆட்கள் தேவை என்றும் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்" என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அந்த விளம்பரங்களை நம்பி அணுகும் பட்டதாரி இளைஞர்களிடம், வேலைக்கான விசா பெற தாமதமாகும் எனக் கூறி, அவசரமாக சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு ஏஜெண்டுகள் அழைத்துச் செல்கின்றனர்.
பாங்காக் விமான நிலையத்தில் இறங்கும் இளைஞர்களை வரவேற்கும் உள்ளூர் ஏஜெண்டுகள், அவர்களை காரில் அழைத்துச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் வேலை செய்யும் இடத்திற்குச் செல்லாமல், தாய்லாந்து-மியான்மர் எல்லையைக் கடந்து, ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 'கே.கே. பார்க்' மற்றும் 'மயாவடி' போன்ற மிக அபாயகரமான முகாம்களுக்குள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றனர்.
முகாமிற்குள் நுழைந்தவுடன் இளைஞர்களின் பாஸ்போர்ட், செல்போன் மற்றும் அடையாள அட்டைகள் பறிக்கப்படுகின்றன. மேலும் இந்தியர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை குறிவைத்து 'கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி', 'டேட்டிங் ஆப் மோசடி' மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' போன்ற ஆன்லைன் ஏமாற்று வேலைகளை செய்ய அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.
தினசரி நிர்ணயிக்கப்படும் இலக்குகளை முடிக்கத் தவறினால் அல்லது இந்த வேலைகளை செய்ய மறுத்தால், இளைஞர்கள் கொடூரமான உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பட்டினியாக போடுதல், இரும்பு கம்பிகளால் தாக்குதல் மற்றும் மின்சார அதிர்வு கொடுப்பது போன்ற அத்துமீறல்கள் அங்கு தினசரி நடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தமிழக சைபர் கிரைம் போலீசாரும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் இளைஞர்களை ஏமாற்றி அனுப்பிய ஏஜெண்டுகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி மணவாளன் (35 வயது), ராஜ்குமார் (36 வயது), தீபக் டோனா (27 வயது) மற்றும் ஜோவின் அபிஷேக் ராஜன் (28 வயது) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களுக்கு பின்னணியில் செயல்படும் சர்வதேச கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை உடைக்க விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக, அந்த நாட்டு ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து முகாம்களில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் இளைஞர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது சட்டவிரோதமானது. கண்டிப்பாக 'வேலை விசா' மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே வேலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல்களைப் பகிர விரும்புபவர்கள், தமிழக அரசின் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடனே தொடர்பு கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்தனர்.