‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எழுச்சி கொண்டாட்டம்; மு.க.ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தனர்

2½ லட்சம் மாணவர்கள் பயன்பெறும் புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன் திட்டம் - தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழக அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ என்ற திட்டமும், மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டமும் தொடங்கப்பட்டு, மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான "புதுமைப்பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்கவிழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இந்த விழாவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டு இரு திட்டங்களையும் தொடங்கிவைத்தார். விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். இந்த இரு திட்டங்களின் மூலம் 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாக பிரித்து நடத்தப்பட்டது.
முதல் பகுதியாக "முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்” இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து “நான் முதல்வன்”, “விளையாட்டுச் சாதனையாளர்கள்”, “புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்” மற்றும் “அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்” என்று அடுத்தடுத்து நடைபெற்றது.
ஒவ்வொரு அரங்கத்திலும் அந்தந்த திட்டங்களால் பயன்பெற்றவர்கள், அத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
அதன்பின்னர், தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அமைச்சர்கள் கீதா ஜீவன், கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டாக்டர் மா.மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நடிகர் சிவக்குமார், சிவகார்த்திகேயன், இயக்குநர் மிஸ்கின், தமிழரசன், பச்சமுத்து பலர் கலந்துகொண்டனர்.






