

சென்னை,
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 6ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவமாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் எழுத இருக்கின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் முதல்நாள் தேர்வு நடக்கிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடம் வினாத்தாள்களை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாளில் உள்ள விவரங்களை சரிபார்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைகிறது.
தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படை அமைக்கப்பட்டன.
காப்பி அடிக்கக்கூடாது, காலணி, ஷூ, பெல்ட் அணியக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் மாணவ மாணவிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு இருக்கிறது.
இந்த தேர்வுக்காக 296 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மைய வளாகத்துக்கு செல்போன் எடுத்து வருதல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாக கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
தேர்வு எழுதும் அனைத்து தமிழக மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.