

சென்னை,
தமிழக அரசின், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடட் சார்பில் தயாரிக்கப்படும் அரசு சிமெண்ட் நாளை முதல் வலிமை சிமெண்ட் எனும் பெயரில் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் சிமெண்ட்டின் சில்லறை விற்பனை விலை மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்.
தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடட் சார்பில் தயாரிக்கப்படும் அரசு சிமெண்ட் நாளை முதல் வலிமை சிமெண்ட் எனும் பெயரில் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். வலியதோர் உலகம் செய்வோம் எனும் கருத்தை மையமாக கொண்டு இந்த சிமெண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிமெண்ட் குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் உருவாகி உள்ளது.
சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இந்த திட்டம் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.