தமிமுன் அன்சாரி, கருணாஸ் மீதும் நடவடிக்கை அரசு தலைமை கொறடா பேட்டி

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக செயல்பட்டால் தமிமுன்அன்சாரி, கருணாஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கூறினார்.
தமிமுன் அன்சாரி, கருணாஸ் மீதும் நடவடிக்கை அரசு தலைமை கொறடா பேட்டி
Published on

அரியலூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அ.தி.மு.க.வுக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறி எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் அரியலூரில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படும் தமிமுன்அன்சாரி மீது இப்போதைக்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. வரும் நாட்களில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்துத்தான் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் ஆதாரம் கிடைத்தால் கருணாஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சபாநாயகருக்கு உரிமை

தற்போது தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வுக்கு எதிராக எவ்வாறு செயல்பட்டார்கள், எங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு எவ்வாறு பணியாற்றினார்கள் என்பதை ஆதாரத்துடன் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளேன். இதையடுத்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இதற்கு விளக்கம் அளிக்கும் பட்சத்தில் எவ்வகையான முடிவையும் எடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com