

குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கணக்கில் கொண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு நீலகிரி மாவட்டத்தில் ஓரளவு குறைந்தாலும், தற்போது வரை பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு அதிகரித்துதான் வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் அருகே வண்டிச்சோலை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக்கடை சுகாதாரமற்ற முறையில் நடத்திவருவதாகவும், அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. அங்கு சென்ற தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். டாஸ்மாக் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி அவற்றை வனபகுதிக்குள் வைத்து எரித்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு சீல் வைத்து குன்னூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடை நிர்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே அபராத தொகையை செலுத்தி, மாவட்ட கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே கடை திறக்கலாம் என்று வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.