

திருநெல்வேலி,
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்பட்டன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை வழக்கம் போல் திறக்கப்பட வேண்டிய அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் திடீரென பூட்டப்பட்டுக் கிடந்தன. கடைகள் திறக்கப்படாததை கண்டு அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்கள், கடைகளின் முன்பு நீண்ட நேரம் ஏமாற்றத்துடன் தவித்து நின்று அலைமோதினர். மாவட்டம் முழுவதும் மது விற்பனை முற்றிலும் முடங்கியது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாதிக்கப்பட்ட தங்களது சக ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்ட அவர்கள், உள்ளே புகுந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலக வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த திடீர் கடைகள் மூடல் மற்றும் ஊழியர்களின் முற்றுகைப் போராட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் இன்று பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.