

சென்னை
தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு அரசு நிர் ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட, பாட்டிலுக்கு ரூ.10 மற்றும் அதற்கு மேலும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்தக் கூடுதல் வசூல் முறைக்கு முழுமை யாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று த.வெ.க. அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
செயலி மூலம் முன்பதிவு செய்துவிட்டு, கடைகளில் நேரடியாக மதுபானங்களை வாங்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பெரும்பாலானவை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்படி, கடந்த 1-ந்தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனிமேல் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதை அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று அமைச்சர் விக்னேஷ் கடுமையாக எச்சரித்தார்.
அரசு நிர்ணயித்த விலையைவிட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால்கூட முதல் முறையில் 3 மாதங்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். அதே தவறை மீண்டும் செய்தால் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்ப டுவார்கள் என்று சட்டப்பேரவையிலும் அமைச்சர் அறிவித்தார்.
இந்தநிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தும், அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது தொடர்வதாக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பான செய்தி நேற்றைய தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இது அரசின் கவனத்துக்குச் சென்றது.
மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட புகார்களை மதுபிரியர்கள் எளிதாகத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு புதிய புகார் சேவை மையத்தை தொடங்கியது. இந்த மையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 67 டாஸ் மாக் ஊழியர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக 67 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 67 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்கள் பணி வழங்கப்படாது. அரசின் நடவடிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், 6 டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் ஊழியர்கள் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் குவிந்தனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த பிரச்னைக்காக திண்டிவனம் நகர மற்றும் கிராமப்பகுதியிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று மதியம் 12:00 மணியிலிருந்து திறக்கப்பவில்லை.
இந்தநிலையில் சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திடீரென எந்த முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தடுக்கும் நடவடிக்கையில் ஏற்படும் செலவினத்தை ஏற்க வலியுறுத்தியதாக தெரிகிறது.
காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திலும் தங்கள் சொந்த காசை செலவிடவேண்டியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். டாஸ்மாக் கடைகள் போராட்டம் காரணமாக மூடப்பட்டதால், டாஸ்மாக் கடைக்கு வந்திருந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.