விவசாயிகளுக்கான தட்கல் மின் இணைப்பு திட்டம்; கால அவகாசம் நீட்டிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை

திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது மின் இணைப்பு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.
சென்னை,
விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இலவச மின்சாரம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகள் தட்கல் திட்டத்தில் இணைப்பு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் என கடந்த 16-ந்தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான 2 நாட்களில் இத்திட்டம் நிறைவு பெற்றுவிட்டதாக விண்ணப்பம் பெறுவதை நிறுத்தி விட்டார்கள்.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது, நம்பிக்கையோடு காத்திருந்த விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு குறைந்தபட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது இத்திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






