

சென்னை,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டுக்கு முன் அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவதற்காக பல மாநிலங்களில் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அத்தகைய திட்டங்களை அறிவிக்காதது ஆசிரியர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது. கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பிற விதிகளை பின்பற்றி நியமிக்கப்படுகின்றனர். 2011 ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற நிலை தான் இருந்தது. ஆனால் அவர்களுக்கு தகுதித் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2011 ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தீர்ப்பளித்தது.
பணியில் உள்ள ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உடனேயே ஆசிரியர்களுக்காக சிறப்புத் தகுதித் தேர்வை மிகவும் எளிமையான முறையில் நடத்தியும், தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்தும் அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய திமுக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதுடன், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பு தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டது. அவை தான் வருகின்ற ஜூலை 4,5 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
2011 ஆம் ஆண்டுக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கற்ற போது இருந்த பாடத்திட்டமும் இப்போது உள்ள பாடத்திட்டமும் முற்றிலுமாக வேறுபாடு நிறைந்தது என்பதால் அந்த ஆசிரியர்களால் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம் ஆகும். அதனால் அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்க வேண்டும் என்பது தான் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அத்தகைய சிறப்பு சலுகைகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பொதுப்பிரிவினர் 60% (150 க்கு 90) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% (150 க்கு 82) மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி இட ஒதுக்கீட்டு பிரிவினரில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான தேர்ச்சி மதிப்பெண் 50% ஆகவும் உயர்த்தப்பட்டது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை இரு பிரிவுகளாக பிரிப்பது முறையல்ல.
அதன்பின் அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்கள் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆசிரியர் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ஆசிரியர்கள் 75 மதிப்பெண்களும், பட்டியலின, பழங்குடியின ஆசிரியர்கள் 60 மதிப்பெண்களும் எடுப்பது கடினம் என்று கூறப்படுகிறது. தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்காமல் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்றும், சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறாது என்றும் ஆசிரியர் அமைப்புகள் கூறுகின்றன. இதை அரசு உடனடியாக கவணத்தில் கொள்ள வேண்டும்.
இந்த சூழல்களையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மேற்கு வங்க அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற 55 மதிப்பெண்கள் (37%) போதுமானது என்று அறிவித்திருக்கிறது. இது நியாயமானது தான். 2011 ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் 20 ஆண்டுகளுக்கும் கூடுதலான பணி அனுபவம் கொண்டிருப்பார்கள். அவர்களின் தகுதி மீது யாரும் எந்த ஐயமும் கொள்ள முடியாது. அவர்கள் ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை உருவாக்கிய ஆசிரியர்கள் தான். அவர்களுக்கும் தகுதித் தேர்வு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் அதை நிறைவேற்றுவதற்காகத் தான் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பிட்ட அளவுக்கு கீழ் குறைக்காதபட்சத்தில் நீதிமன்றமும் இதை எதிர்க்காது. எனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 150 க்கு 75 (50%) ஆகவும், மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 150 க்கு 52 (35%) ஆகவும் குறைக்க வேண்டும். அதன் மூலம் சிறப்புத் தகுதித் தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பணியில் தொடருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களின் இந்த முக்கிய பிரச்சினையை அரசு விரைந்து தீர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.