மாணவிக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் பணி இடைநீக்கம்

ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் பணி இடைநீக்கம்
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சிறுத்தொண்டநல்லூரில் உள்ள பள்ளியில் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவருக்கு பள்ளியின் விலங்கியல் துறை ஆசிரியர் அழகர், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதான புகார் குறித்து பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் அழகரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com