

சென்னை,
தமிழகத்தில் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் இன்னும் பணி நியமனம் வழங்கப்படாததை கண்டித்து, ஆசிரியர்கள் சென்னையில் இன்று நூதன முறையில் கண்களில் சிவப்பு துணி கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இன்று காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்டனர். அவர்கள் தங்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கக்கோரி திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் தங்களது கண்களில் சிவப்பு நிற ரிப்பன்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். தங்களின் வாழ்வாதார போராட்டத்தை அரசு இன்னும் கவனித்து பார்க்கவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த நூதன முறையை கையாண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் குறைந்த அளவில் ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். எந்தவொரு மறுதேர்வும் இன்றி, தகுதி பட்டியலில் உள்ளவர்களுக்கு நேரடியாக வேலை வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 ஆசிரியர் மட்டுமே உள்ள அரசு பள்ளிகளை மாற்றி, குறைந்தபட்சம் 5 ஆசிரியர்களை கொண்ட பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும்.
இது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்களின் இந்த கண்கட்டி போராட்டம் அந்த வழியே சென்ற பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.