ஆசிரியர்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் ஆசிரியர்கள் போராட்டம் நடந்தது
ஆசிரியர்கள் போராட்டம்
Published on

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சி.எஸ்.ஐ. டயோசீசன் கட்டுப்பாட்டில் டி.டி.டி.ஏ. பள்ளிகளில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 54 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் கல்வித்துறை மூலம் பணி ஒப்புதல் பெறுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிர்வாகம் சார்பில், கல்வித்துறைக்கு பரிந்துரை செய்து பணி ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஆசிரியர்கள் பாளையங்கோட்டையில் உள்ள டயோசீசன் பள்ளிகளுக்கான மேலாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் பிஷப் பங்களா முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிர்வாகம் தரப்பில் விரைவில் பணி ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com